"62 ஆவது குடியரசு தினமும், இந்திய மக்களுடைய நிலையும்" மார்க்சிய சிந்தனைக் கூடத்தின் பொதுக்கூட்டம்
இந்தியாவின் 62வது குடியரசு தினமான சனவரி 26, 2012 அன்று, மார்க்சிய சிந்தனைக் கூடம் சென்னை காமாராசபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பல்வேறு மார்க்சிச லெனினிச இயக்கங்களும், கட்சிகளும் பங்கேற்றன. அவர்கள், கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மக்கள் அனுபவித்து வரும் காட்டுமிராண்டித்தனமான சுரண்டலையும், ஒடுக்குமுறையையும், உரிமை மீரல்களையும், வாழ்வுரிமை மறுப்பையும் எடுத்துக் கூறி, இந்த நாடு சுதந்திரமான நாடுதானா, இந்தக் குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதானா என்ற மையக் கேள்வியை எழுப்பினர்.
காமராசபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிய சிந்தனைக் கூடம், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா-லெ), இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல கம்யூனிஸ்டு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். கூட்டத்தைத் துவக்கி வைத்து தலைமை தாங்கி நடத்திவைத்த தோழர். ஏகாம்பரம் அவர்கள், இந்திய மக்களுடைய இன்றைய வாழ்நிலைமையை சுருக்கமாக எடுத்துரைத்தார். இன்று இந்தியாவை ஆண்டுவருபவர்கள் கோலாகமாகக் கொண்டாடுகின்ற 62 வது குடியரசு தினத்தில் பெருவாரியான மக்கள் புறக்கணிக்கப்பட்டு நிற்கிறார்கள். இந்த நிலைமைக்கு இந்தியாவை ஆண்டு வருபவர்களே காரணம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு இந்தச் சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து தொழிலாளிகள், விவசாயிகளை இந்நாட்டின் மன்னர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் பாஸ்கர் அவர்கள்,நம் நாடு சுதந்திரம் பெற தம் இன்னுயிரை ஈந்த வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சூல்தான், பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ், மற்றும் எண்ணெற்ற தியாகிகளை நினைவு கூர்ந்தார். நம்முடைய வீரத் தியாகிகள் எண்ணிய கனவு நிறைவேறியதா, நம்முடைய பெரும்பான்மையான மக்களுக்கு விடுதலை கிடைத்ததாவென அவர் கேள்வியெழுப்பினார். பகத் சிங் - "நாங்கள் வெள்ளையர்களை தூக்கி எறிய மட்டும் போராடவில்லை. தொழிலாளிகள்-விவசாயிகள் மீது சுரண்டல் நீடிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்"என்றார். நம்முடைய வீரத் தியாகிகள் மேற்கொண்ட போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நமது நாட்டில் மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. சிரிபெருமந்தூரில் உள்ள உண்டாய் கார் உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காக போராடி வருகிறார்கள். தொழிற்சங்கம் அமைத்ததற்காக பல தொழிலாளிகளை உண்டாய் நிர்வாகம் வேலை நீக்கம் செய்திருக்கிறது. இதை எதிர்த்து தொழிலாளிகள் அங்கு போராடி வருகிறார்கள். குர்கானில் உள்ள மாருதி கார் தொழிற்சாலைத் தொழிலாளிகளும் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். ஏர் இந்தியாவின் விமானிகளும், கேபின் கிரூவினரும், ஊழியர்களும், தற்காலிகத் தொழிலாளிகளும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். ஏர் இந்தியாவைச் சேர்ந்த தற்காலிகத் தொழிலாளிகள் கடந்த 20-30 ஆண்டுகளாக ஆண்டிற்கு 100-180 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு, நிரந்தரப்படுத்தப்படாமல் தொடர்ந்து தற்காலிகத் தொழிலாளிகளாகவே வைத்துக் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் தொழிலாளுக்கு அடிப்படை உரிமைகூட இல்லாமல், அவர்களுடைய நிலை மிகவும் வெட்கக் கேடாகவும், மோசமாகவும் இருந்து வருகிறது. இது போலவே, விவசாயிகளும் பெரு முதலாளிகளால் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாகவே, பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
நாடெங்கிலும் நமது மக்களுடைய தேசிய இன உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூர், நாகாலாந்து, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும், காசுமீரத்திலும் கொடூரமான ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுடைய உரிமைகளும் வாழ்வுரிமையும் மீறப்படுகிறது. கூடங்குளம், ஜெய்தாப்பூர் போன்ற இடங்களில் அரசாங்கத்தின் அணுஉலைத் திட்டங்களை எதிர்த்தும், பிற இடங்களில் தங்களுடைய விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்தும் மக்கள் போராடி வருகிறார்கள். இவ்வாறு சுதந்திர குடியரசான இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுடைய வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறது என்பதை பாஸ்கர் எடுத்துக் கூறினார்.
இப்படிப்பட்ட மக்கள் விரோத அரசானது, விடுதலை அடைந்த காலத்திலிருந்தே பல்வேறு பெயர்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலைக்குப் பின்னர் முதல் 30-40 ஆண்டுகளில் பொதுத்துறை என்ற பெயரிலும், "சோசலிச பாணி சமுதாயம்"என்ற பெயரிலும், பெருமுதலாளிகள் கொழுப்பதற்கான உள்கட்டுமான துறைகளில் மக்களுடைய வரிப்பணத்தை அரசாங்கம் முதலீடு செய்தது. 1990 களில் இந்திய பெரு முதலாளிகள் கொழுத்து உலக அளவில் போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்ற பின்னர், தனியார்மயம்-தாராளமயம் மூலமாக உலகமயமாக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் துவங்கியது என்பதை எடுத்துக் கூறினார். மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி வந்த கட்சிகளும் கூட்டணிகளும் பெரு முதலாளி வர்க்கம் கொழுப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியும், இவற்றை எதிர்த்து உரிமை கேட்கின்ற மக்களை தாக்கி ஒடுக்கியும் வந்துள்ளனர்.
ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும், சுரண்டல் அமைப்பு முறை தங்கு தடையின்றி வளர்ந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இன்றுள்ள அரசியல் வழிமுறையில் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், அதிகாரமானது தொடர்ந்து பெரு முதலாளிகளுடைய கைகளில் இருந்து வருகிறது. யார்யார் எந்தெந்தத் துறைகளுக்கு அமைச்சராக இருக்க வேண்டுமென்பதை பெருமுதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை நீரா ராடியா ஒலிச் சுருள்களும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.
சனநாயகம் என்று அழைக்கப்படும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சுரண்டலும் ஊழலும் நிறைந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தை மக்கள் நாம் தூக்கியெறிய வேண்டும். தொழிலாளிகள்-விவசாயிகளுக்கான சனநாயகத்தை அமைப்பதற்காக நாம் போராட வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் வழிகாட்ட வேண்டும், என்றார்.
கம்யூனிச இயக்கத்தில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் ஒன்றுகூடி பேசுவதற்கும் ஒருவர் மற்றவர்களுடைய கருத்துக்களை கேட்கவும் ஏற்பாடு செய்த மார்க்சிய சிந்தனைக் கூடத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இது ஒரு துவக்கமாக அமைய வேண்டுமெனவும், விருப்பு வெறுப்பின்றி இன்றைய சூழ்நிலையை ஆராயவும், சரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவும் நாம் மேற்கொண்டு பல்வேறு விவாதங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் கருத்து தெரிவித்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் அனுபவம் வாய்ந்த கம்யூனிச இயக்கத் தோழர்கள் திரு.இரணியப்பன் இ.க.க.(மா-லெ), திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி சிபிஎம், திரு. ஏ.ஆப்ரகாம், சிபிஐ(மா-லெ)-வி, மார்க்சிய சிந்தனைக் கூடத்தைச் சேர்ந்த திரு. மக்கள்தாசன், திரு. இரவீந்திரன், திரு. ஜி.இராமமூர்த்தி, திரு. எஸ்.எஸ்.மாதவன், திரு ப.அங்குசாமி, திரு.ஏனோக் மற்றும் பலரும் உரையாற்றினர். அனைவரும் இன்றைய குடியரசின் மக்கள் விரோதப் போக்கினை எடுத்துரைத்து மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படையில் புதியதொரு சமுதாயத்தைக் கட்ட வேண்டிய உடனடித் தேவையை வலியுறுத்தினர். இதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனையோடு கூட்டம் நிறைவு பெற்றது.







Comments
Post new comment